‘பபாசி’ புத்தக கண்காட்சியில்   6 பேருக்கு பொற்கிழி விருது தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு

by Editor / 01-10-2021 04:05:04pm
‘பபாசி’ புத்தக கண்காட்சியில்   6 பேருக்கு பொற்கிழி விருது தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு

2007-ல் 30ஆவது சென்னை புத்தகக் காட்சியை துவக்கிவைத்த, முன்னாள் முதல்வர் திமுக தலைவர் தம் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை பபாசியிடம் வழங்கினார். ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும் ஒரு ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் தலா ஒரு லட்சம் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்கக் கூறினார்.

அதற்காக பபாசியால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் இருந்து, கவிதை, புனைவிலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் எழுதும் சிறந்த 2 பேருக்கும் ஆண்டுதோறும் விருது மற்றும் ரூ.1 லட்சம் பணமும் அளித்துக் கவுரவித்து வருகிறது. அதன்படி 2007ல் இருந்து இதுவரை 84 எழுத்தாளர்களுக்கு 84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.


2021 ஆம் ஆண்டுக்கான விருதாளர்களை அதற்காக அமைக்கப்பெற்ற குழு தேர்வு செய்துள்ளது. தேர்வுபெற்ற விருதாளர்கள் பட்டியலை பபாசியின் தலைவர் ஆர்.எஸ் சண்முகம் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக நடைபெறாமல் நின்றுவிட்ட 2020ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவும் 2021ஆம் ஆண்டுக்கான விழாவுடன் இணைந்து நடைபெறும். விழா குறித்த தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


அபி கவிதைக்கும், இராசேந்திர சோழன் புனைவிலக்கியத்துக்கும், எஸ்.ராமகிருஷ்ணன் உரைநடைக்கும், வெளி ரங்கராஜன் நாடகத்துக்கும், மருதநாயகம் ஆங்கில நூலுக்கும், நதித் சாகியா காஷ்மீரி மொழி நூலுக்கும் பொற்கிழி விருது வழங்கப்படுகிறது.

 

Tags :

Share via