மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள மஞ்சம்பட்டி புனித வனத்து அந்தோணியார் ஆலயத்தின் பொங்கல் விழாவை முன்னிட்டு தேவாலயத்தின் முன்பு உள்ள திடலில் ஜல்லிக்கட்டு விழா இன்று நடந்து வருகிறது. ஶ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார்.
திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள 600 ஜல்லிக்கட்டு காளைகள் இப்போட்டியில் கலந்து கொள்கின்றன. வாடிவாசலிலிருந்து சீறி வரும் காளைகளை அடக்க 250 மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் களம் கண்டு வருகின்றனர்.
காளைகளை லாவகமாக பிடிக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும்கட்டில், சில்வர் குடம், மின்விசிறி, அண்டா, ரொக்கப்பணம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் போட்டியை காண குவிந்துள்ளனர்.
Tags :