கோவில்பட்டி அருள்மிகு ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் பங்குனித்தெப்பத் திருவிழா

by Admin / 16-04-2023 12:03:53pm
கோவில்பட்டி அருள்மிகு ஶ்ரீ செண்பகவல்லி அம்மன்  பங்குனித்தெப்பத் திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழாவின் நிறைவு நாளையொட்டி  தெப்பத் திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனித் திருவிழா இம்மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், திருவீதியுலாவும் நடைபெற்றன. 9ஆம் திருநாளான வியாழக்கிழமை தேர் திருவிழாவும், 10ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை தீர்த்தவாரி தீபாராதனையும் நடைபெற்றது.

11ஆம் திருநாளான நாடார் உறவின் முறைச் சங்க சார்பில் இன்று தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி திருக்கோயிலில் நடை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதைத் தொடர்ந்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயில் மண்டபத்தில் யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் கோயிலில் இருந்து புறப்பட்டு பிரதான சாலையில் உள்ள அடைக்கலம் காத்தான் மண்டபம் வந்தடைந்தனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் திருவீதியுலா நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தெப்பக் குளத்திற்கு வந்தடைந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத்தை 9 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.  தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவகலைப்பிரியா, பொதுப்பணி துறை உதவி கோட்டப் பொறியாளர் பரமசிவம், கோவில்பட்டி நாடார் உறவின் முறைச் சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம், துணைத் தலைவர் செல்வராஜ், செயலர் ஜெயபால், பொருளாளர் சுரேஷ்குமார், தொழில் அதிபர்கள் எஸ் எஸ் டி எம் கல்லூரி செயலாளர் கண்ணன், அமலி பிரகாஷ், சந்திரசேகர், அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் தர்மகர்த்தா மாரியப்பன் உள்பட நாடார் உறவின் முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பள்ளி, கல்லூரி, கோயில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தெப்பத் திருவிழா கமிட்டியின் உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 

கோவில்பட்டி அருள்மிகு ஶ்ரீ செண்பகவல்லி அம்மன்  பங்குனித்தெப்பத் திருவிழா
 

Tags :

Share via