வயிற்றில் 8 கிலோ கட்டி: அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

by Staff / 18-10-2023 03:46:47pm
வயிற்றில் 8 கிலோ கட்டி: அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

சென்னையை அடுத்த தாம்பரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (47). இரண்டு மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர், சமீபத்தில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதனையில் கல்லீரலுக்கு கீழே பெரிய கட்டிஇருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, புற்றுநோயியல் துறை தலைவர் எஸ். சுப்பையா தலைமையில் மருத்துவர்கள் ஜெகதீஷ் சிங், விஜயலட்சுமி, மயக்க மருத்துவர்கள் பிரணாப் நிர்மல், பால் பிரவீன், அபிநயா மற்றும் செவிலியர் ஷமிலி ஆகியோர் கொண்ட குழுவினர் சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 8 கிலோ எடை கொண்ட கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.

இதுதொடர்பாக டீன் ஆர். முத்துச்செல்வன் கூறியதாவது: இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர், நோயாளி, பெரிய சுமையை இறக்கி வைத்ததைப் போல் உணர்கிறார். கட்டி பெரியதாக இருந்ததால், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்ய போதிய இடம் இல்லாமல் இருந்தது. ஆனாலும் ரத்த நாளங்கள் மற்றும் உறுப்புகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஒரு சவாலாக எடுத்து கட்டி அகற்றப்பட்டுள்ளது. கட்டியை அகற்ற ‘தாம்சன் பின்னிழுப்பமைப்பு’ கருவி பயன் படுத்தப்பட்டது. லேப்ராஸ்கோப்பி சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நவீன சிகிச்சை முறைகள் இங்கு உள்ளன என தெரிவித்தார்

 

Tags :

Share via