கோவில்களில் ராமர் பெயரில் பூஜைக்கு தடையா - சேகர்பாபு பதில்

by Staff / 21-01-2024 02:53:04pm
கோவில்களில் ராமர் பெயரில் பூஜைக்கு தடையா - சேகர்பாபு பதில்

அயோத்தியில் நாளை ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், அதை முன்னிட்டு தமிழக கோவில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தக்கூடாது என, தமிழக அரசு தடை விதித்து வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு முற்றிலும் மறுத்து X தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், "சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது, " என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo